ராஜஸ்தானை சுத்து போட பார்த்த பாகிஸ்தான் ட்ரோன்கள்.. தக்க நேரத்தில் தடுத்து சிதறடித்த இந்திய ராணுவம்!
ஜெய்பூர்: ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களான பார்மர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அங்கு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் வந்ததாகவும் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காநகர், பலோடி மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் அவற்றை முறியடித்துள்ளது இந்திய ராணுவம்.

பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஏவும் ட்ரோன்களை இந்திய ராணுவம் நடு வானிலேயே அழித்தொழித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இரவிலும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது பாகிஸ்தான்.
ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களான பார்மர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு வானில் வெளிச்சப் புள்ளிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து உஷாரான இந்திய ராணுவம் அந்த ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளது.
வான்வழி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய பாதுகாப்புப் படைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக செயல்படுத்தி, வரும் ட்ரோன்கள் தீங்கு விளைவிக்கும் முன் அவற்றை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தன. பின்னர் அதிகாரிகள் ட்ரோன்கள் நடுவானில் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதனால் நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக பார்மர் மாவட்ட நிர்வாகம் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. "ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முழுமையான மின்தடை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும். யாரும் நகர வேண்டாம். பொதுமக்கள் எந்த வகையிலும் பீதி அடைய வேண்டாம். இது முழுமையான மின்தடை" என்று பார்மர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ட்ரோன்கள் காணப்பட்ட இடங்களில் பார்மர் மற்றும் ஜெய்சால்மர் ஆகியவை அடங்கும். பார்மரில் வசிக்கும் நபர் ஒருவர் "இரவு 9 மணியளவில், வானத்தில் சத்தம் கேட்டது. பின்னர் பார்மர் நகரம் முழுவதும் சைரன் கேட்டது, மொட்டை மாடிகளில் இருந்த மக்கள் வீட்டிற்குள் சென்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பார்மர் குடியிருப்பார் கூறுகையில், "வானத்தில் பலத்த சத்தம் கேட்டது. பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. இது பார்மர் மாவட்ட மக்களிடையே, குறிப்பாக பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது" என்று அவர் கூறினார்.
வானில் தென்பட்ட ட்ரோன் காட்சிகளைத் தொடர்ந்து, பார்மருக்குச் செல்லும் பல வாகனங்கள் நகரத்திற்கு 15 கி.மீ. தொலைவில், ஒரு சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டன. இரவு 11 மணியளவில், கங்காநகர் மாவட்ட நிர்வாகம், பசுமை எச்சரிக்கைக்கு மாறியதாகவும், குடிமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மின்சாரத்தை "எச்சரிக்கையாக" பயன்படுத்த அனுமதிப்பதாகவும் கூறியது.












Click it and Unblock the Notifications