ரூ.3720 கோடி செலவில் ஜம்முவில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை சுரங்கப்பாதை.. இந்தியாவிலேயே மிக நீளமானது!!
ஜம்மு-ஸ்ரீநகர் இடையே 3720 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே மிக நீளமான இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செனானி: ஜம்மு-ஸ்ரீநகர் இடையே 3720 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே மிக நீளமான இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு இமயமலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே 1200 மீட்டர் உயரத்தில் 9.2 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இரட்டை சுரங்கப் பாதை பணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் இந்த வழித்தடத்தில் விரைவில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 286 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிப்பாதை ரூ.3720 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் வெற்றி
இதில் 9.2 கி.மீ நீளத்துக்கு மலையை குடைந்து இரட்டை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி தற்போது நிறைவடைந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த சுரங்கப்பாதையால் ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான பயணம் குறையும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு பள்ளத்தாக்கை அடைய பெரும் வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
இதனிடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறித்து நிசார் அகமது என்ற ட்ரக் டிரைவர் ஒருவர் கூறுகையிரல், இந்த சுரங்கப்பாதையால் எங்களின் பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாள் இந்த சுரங்கப்பாதை வழியாக முதல்முறையாக செல்லப்போகிறேன், இவ்வாறு கூறினார்.
டோல் கட்டணம் அறிவிப்பு
இந்தச் சுரங்கச் சாலையை பயன்படுத்த டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுரங்கப்பாதையில் லகு வாகனங்கள் ஒருவழியில் செல்ல 55 ரூபாயும், இருபுறமும் செல்ல 85 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணமாக 1870 ரூபாயும் பெரிய வாகனங்கள், மினி பஸ்களுக்கு ஒரு வழியில் செல்ல 90 ரூபாயும் இருவழியிலும் செல்ல 135 ரூபாயும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும ட்ரக்குகளுக்கு ஒரு வழிக்கு 190 ரூபாயும் இருவழிக்கு 285ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகள்
இந்த சுரங்கச் சாலையில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்த சாலை அமைத்த ஐஎல் மற்றும் எப்எஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரத்தோர் கூறுகையில், "இந்த சுரங்கச்சாலையை கண்காணிக்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளது.
சுரங்கத்துக்குள் போன் நெட்வொர்க்
அவசர காலத்தில் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஹைடெக் தீயணைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல், ஏர்டெல், ஐடியா போன்ற மொபைல் போன் நெட்வொர்க், எப்.எம் ரேடியோ சேனல் போன்ற வசதிகளும் சுரங்கச் சாலைக்குள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
செனானி- நஸ்ரி தூரம் குறைந்தது
இந்தச் சுரங்கச்சாலை மூலம் ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் இரண்டரை மணி நேரம் குறையும். உதம்பூர் செனானி மற்றும் நஸ்ரி இடையிலான 41 கி.மீ தூரம், இந்த சுரங்கப்பாதை மூலம் 10.9 கி.மீட்டராக குறைந்துள்ளது.
எரிபொருள் டேங்கர்களுக்கு அனுமதியில்லை
சுரங்கச்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வேகம் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்கர் லாரிகள் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.