'ஸ்டிங் ஆபரேஷன்' எதிரொலி- சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவை நிறுத்தி வைத்த இந்தியா டுடே!
டெல்லி: காசு கொடுத்தால் விருப்பபடி கருத்துக் கணிப்பு முடிவுகளை சிலர் வெளியிடுவதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த இந்தியா டுடே நிறுவனம் சி வோட்டர் மூலம் தான் நடத்திய கருத்துக் கணிப்பின் முடி்வுகளை நிறுத்தி வைத்து விட்டது.
மேலும் சி வோட்டர் மூலம் தான் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிடப் போவதில்லை என்றும் அது அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று இதுதொடர்பாக நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் காரணமாகவே இந்த முடிவுக்கு இந்தியா டுடே வந்துள்ளது.
புனீத் ஜெயின் சொல்வது என்ன
இதுகுறித்து இந்தியா டுடே குழுமத்தின் சட்டப் பிரிவு தலைவர் புனீத் ஜெயின் கூறுகையில், ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் நாங்கள் தீவிரமாக ஆய்ந்து வருகிறோம்.
அதுவரைக்கும் சஸ்பெண்ட்
அதுவரையிலும் இந்தியா டுடேவுக்காக சி வோட்டர் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்புகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
சி வோட்டருக்கு நோட்டீஸ்
மேலும் இதுதொடர்பாக சி வோட்டர் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தவறுகளை ஏற்க முடியாது
நாங்கள் எந்தக் காரணத்துக்காகவும் தவறான தகவல்களை வாசகர்களுக்கு அளிக்க விரும்பவில்லை. நாங்கள் வெளியிடும் எதுவாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் தருவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இது இந்தியா டுடே போட்ட ஒரு கருத்துக் கணிப்பு
இந்தியா டுடே சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது. அதை நடத்தியது சி வோட்டர்தான். தற்போது காசு கொடுத்தால் நாட்டின் 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் விருப்பப்படி கருத்துக் கணிப்பை நடத்தித் தருவதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்த லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பு முடிவுகளை இங்கே போய்ப் பார்க்கலாம் ...
சி வோட்டர் சொன்னது இது..
தனது கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு படு சாதகமாக முடிவுகளைத் தெரிவித்திருந்தது சி வோட்டர். அதாவது உ.பியில் பாஜகவுக்கு 30 இடம் கிடைக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 24 இடம் என்றும், சமாஜ்வாடிக்கு 20 இடம் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது. காங்கிரஸுக்கு வெறும் 4 இடம்தான் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.
ஆனால் ஸ்டிங் ஆபரேஷன் தற்போது சி வோட்டர் போன்றவற்றை அம்பலப்படுத்தி விட்டதால் இந்தியா டுடேவுக்கு பெரும் தர்மசங்கமடாகியுள்ளது.