இந்திய அமைதிப் படை போல இலங்கையில் மீண்டும் இந்திய ராணுவம்?மோடி பயணத்தின் போது மிக முக்கிய ஒப்பந்தம்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது இந்தியா- இலங்கை இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஏப்ரல் 4-ந் தேதி பயணம் மேற்கொள்கிறார். இலங்கையில் 2 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அதிபர் அனுர குமார திசநாயக்க மற்றும் பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்திய வம்சாவளித் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான சீனா ஆதரவான ஜேவிபியின் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான நாடாக இருக்கும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவோ, முதல் வெளிநாட்டு பயணமாக டெல்லி வருகை தந்தார். டெல்லியில் அனுர குமார திசநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அனுர குமார திசநாயக்கவின் இந்திய பயணத்தின் போது, இலங்கையில் சீனா காலூன்றி நிற்பது குறித்த கவலை தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு வெளிநாட்டின் நடவடிக்கைக்கும் இலங்கை மண்ணில் அனுமதி கிடையவே கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார் அனுர குமார திசநாயக்க.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, இந்தியா- இலங்கை இடையே அதிமுக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என்கின்றன தகவல்கள்.
1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் இந்திய ராணுவமான இந்திய அமைதிப் படை களமிறக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளால் இந்திய அமைதிப் படை திரும்பப் பெறப்பட்டது. தற்போது இலங்கையில் சீனா காலூன்றி நிற்கும் நிலையில் 1987-ம் ஆண்டு ஒப்பந்தத்தைவிட அதிமுக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பிரதமர் மோடியின் பயணத்தின் போது கையெழுத்தாகக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications