சீனாவிற்கு பயந்து பின் வாங்க மாட்டோம்.. இந்தியா ராணுவம் திட்டவட்டம்
சீனாவிற்கு பயந்து பின் வாங்க மாட்டோம் என்று எல்லையில் நின்று அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது இந்திய ராணுவம்.
டெல்லி: சீன ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து பின் வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக இந்திய ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளின் எல்லைகளும் டோகா லா என்ற பகுதியில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வருகிறது.
டோகா லா பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவை கண்காணிக்கவே சீனா திட்டமிட்டுள்ளதாக கருதப்பட்டது.

போர் பதற்றம்
சாலை போடும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் எல்லையில் மோதல் போக்கு முற்றியது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்து வருவதால் போர் பதற்றம் நிலவி வருகிறது.

சீனா எச்சரிக்கை
இந்நிலையில், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சீன அரசு கூறியது. மேலும், இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் சீனா மிரட்டியது.

பின் வாங்காது..
இதனையடுத்து, சீன அரசின் அழுத்தத்துக்கு அடிபணியப் போவதில்லை என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. சீன ராணுவத்துடனான மோதல் முடிவுக்கு வரும் வரை இப்போதுள்ள நிலையைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மீண்டும் சீனா அடாவடி
மேலும், அப்பகுதியில் இருந்து, இந்திய படைகள் வெளியேறினால், சீனா மீண்டும் அடாவடி செய்யும் என்பதால், இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஏராளமான வீரர்கள் இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 10,000 அடி உயரத்தில் தங்கியுள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான தற்காலிக குடில்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் அங்கு கொண்டு செல்லப்படுகிறது.

செயலற்ற ஒப்பந்தம்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று 2012ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஆனால், அது செயலற்ற ஒப்பந்தமாகவே இதுவரை உள்ளது.












Click it and Unblock the Notifications