இந்திய- பாக் பேச்சு.. தேதி இன்னும் முடிவாகவில்லை- மத்திய அரசு
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதுதொடர்பாக இந்திய வெளியவுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வியாழக்கிழமை விளக்கமளித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையே வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை எந்தத் தேதியில் நடத்துவது? என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின்போது பதான்கோட் தாக்குதல் விவகாரத்தை இந்தியா நிச்சயம் எழுப்பும். பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றார்.












Click it and Unblock the Notifications