பணி நேரத்தில் 'நோ பிரேக்'.. லோகோ பைலட்களின் கோரிக்கை நிராகரிப்பு! இந்தியன் ரயில்வே அறிவிப்பு
சென்னை: நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஓட்டுநராக பணியாற்றும் லோகோ பைலட்களுக்கு, இடைவேளை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை ரொம்ப காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக இந்தியன் ரயில்வே தற்போது அறிவித்திருக்கிறது.
அதாவது, உணவு மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் பணி நேரத்தில் பிரேக் வேண்டும் என்று லோகோ பைலட்கள் தொடர்ந்து கோரி வந்தனர். இப்போது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, என்ஜின் பகுதியில் லோகோ பைலட்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்ட் செய்யும் வகையில் கருவிகளை பொருத்தவும் ரயில்வே திட்டமிட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து புது டெல்லி வரை செல்லும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸை எடுத்துக்கொண்டால், இரவு 10 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்படுகிறது. அடுத்த நிறுத்தம் 431 கி.மீ தள்ளி இருக்கும் விஜயவாடாதான். ஏறத்தாழ 6 மணி நேரம் நிறுத்தாமல் வண்டியை ஓட்ட வேண்டும். அதேபோல திருவனந்தபுரத்திலிருந்து ஹெச் நிஜாமுதீன் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிறுத்தத்திற்கும், ஹெச். நிஜாமுதீன் ரயில் நிறுத்தத்திற்கும் இடையே 458 கி.மீ தொலைவை நிற்காமல் கடக்கிறது. 6 மணி நேரம் நிற்காமல் போக வேண்டும்.
இப்படி தொடர்ந்து 6 மணி நேரம் ரயிலை இயக்கும்போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் உணவும் எடுத்துக்கொள்ள முடியாது. இது லோகோ பைலட்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கிறது. இதற்காகத்தான் பிரேக் வேண்டும் என்று பைலட்கள் கேட்கிறார்கள். ஆனால் இந்த கோரிக்கையை இந்தியன் ரயில்வே நிராகரித்துள்ளது. மட்டுமல்லாது, ரயில்களின் வேகத்தை அதிகரிக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது.
இது லோகோ பைலட்களை கடுமையாக பாதிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக 'All India Loco Running Staff Association' அமைப்பு இதனை கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதன் தலைவர் K.C.ஜேம்ஸ் கூறுகையில், "வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தியன் ரயில்வே கவலைப்படவில்லை. மட்டுமல்லாது லோகோ பைலட்களை கண்காணிக்க வீடியோ மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் அமைப்பை பொறுத்துவதும் ஏற்கத்தக்கது அல்ல.
இது லோகோ பைலட்களின் தனியுரிமையை மீறும் செயலாக இருக்கிறது. இதை இந்தியன் ரயில்வே கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் லோகோ பைலட்கள் 6-10 மணி நேரம் வரை பணியாற்றுகிறார்கள். சில நேரம் 12 மணி நேரம் வரை கூட இவர்களது வேலை நீடிக்கிறது. மறுபுறம் கடைசி நேரத்தில் வேலைக்கு அழைப்பது, தொடர்ந்து வேலை வாங்குவது போன்றவற்றால் பைலட்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது ரயில்வே துறையில் போதுமான அளவுக்கு ஆட்களை நிரப்பாததும் இந்த வேலை பளுவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications