இந்தியாவின் அடுத்த சர்ஜிகல் ஸ்டிரைக்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குறிவைக்கப்பட்ட '42' இடங்கள்
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 3-வது சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய அதிரடித் தாக்குதலானது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் காஷ்மீரில் உள்ள 42 தீவிரவாத முகாம்களை குறிவைத்துதான் இருக்கும் என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் அதி உச்ச உஷார் நிலையில் இருக்க பாகிஸ்தான் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து ஆயுதக் குழுக்களை களமிறக்கி வருகிறது பாகிஸ்தான். இந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல்கள், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைக் குடித்து வருகின்றன.

2016-ம் ஆண்டு இதேபோல ஜம்மு காஷ்மீரில் கொடூரமான தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தினர். இதனையடுத்து முதலாவது சர்ஜிகல் ஸ்டிரைக்காக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியை ஒட்டிய தீவிரவாத முகாம்களை நமது வீரர்கள் அழித்தனர். பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நமது ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்த நாடு அலறியது.
இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு புல்வாமாவிலும் நமது ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்த கொடூர தாக்குதலை பாகிஸ்தான் கும்பல் அரங்கேற்றியது. அப்போது, இந்தியர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாகல்கோட் பகுதியில் அதிரடித் தாக்குதல் மூலம் தணித்துகாட்டியது நமது ராணுவம். பாகல் கோட் பகுதியில் நடத்தப்பட்டது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 2-வது சர்ஜிகல் தாக்குதல். இந்த தாக்குதலில்தான் விமானப் படை விமானி சென்னையை சேர்ந்த அபிநந்தன். பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த பின்னணியில்தான் தற்போது ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை பச்சை படுகொலை செய்திருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல். ஈவிரக்கமே இல்லாமல் மகன், மகள், மனைவி கண்முன்னேயே இந்த படுபாதக கொலையை நிறைவேற்றி இருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல். இதனால் நமது நாடு பெரும் கோபத்தில் இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் உச்சமாக, பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்க்க முடியாத- கற்பனைக்கு எட்டாத பலமான அடி வாங்கப் போகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் மீது 3-வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த நமது நாடு தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி, 3-வது சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின் முதல் பகுதியாக இருக்குமாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் 42 இடங்களில் மிக முக்கியமான தீவிரவாத முகாம்கள் இருக்கின்றனவாம். இந்த 42 தீவிரவாத முகாம்களையும் ஒருசேர அழிப்பதுதான் இந்தியாவின் வியூகமாம். இதனை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான், தமது பாதுகாப்புப் படையினரை அதி உச்சநிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாம். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications