வங்கிகளின் வராக்கடன் பிரச்சினைக்கு காரணம் என்ன? வங்கி கான்க்ளேவில் விவாதம்
டெல்லி: பொருளாதார கொள்கை ஆய்வுக்கான மையம், நிதி ஆயோக் ஆகியவை இணைந்து, டெல்லியில், நேற்றும், இன்றும் இந்திய வங்கி கான்க்ளேவ்க்கு (IBC) ஏற்பாடு செய்துள்ளன. வங்கி துறை சார்ந்த விவகாரங்களில் இதில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் ஐசிசி வங்கி சேர்மன் கிரிஷ் சந்திர சதுர்வேதி பங்கேற்று பேசியதாவது:
கடன் மற்றும் அதை திரும்பப் பெறுவதற்கான இடைவெளி என்பது அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளில் வராக்கடன் பிரச்சினையை தீர்க்க சில மாதங்கள் தேவைப்படும். ஆனால் இந்தியாவில் ஐந்து முதல் ஏழு வருடங்கள் ஆகிறது. இந்தியா போன்ற கூட்டாட்சி தத்துவம் கொண்ட ஒரு நாட்டில், வங்கிகள் மிக கடினமான சூழ்நிலையில் செயல்பட வேண்டியிருக்கும்.
ஏனெனில் நிதித்துறை சார்ந்த சில முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது-சில முடிவுகளை மாநில அரசுகள் எடுக்கின்றன. ஆனால் யார் தவறு செய்தாலும் இறுதியில் வங்கிகள்தான் சிக்கலை சந்திக்கின்றன. மேம்பாட்டு நிதி அமைப்புகள் இந்தியாவில் தோல்வியடைந்துள்ளன. லாபமற்ற சொத்துக்களையும் வராக்கடன்களையும் அவை அதிக அளவில் உருவாக்கியுள்ளன. இருப்பினும் மீண்டும் அவை துவங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இப்படிப்பட்ட சுமைகளை நிதி அமைப்புகள் தவிர்க்க வேண்டும், என்றார் அவர்.
யூகோ வங்கியின் மேலாண் இயக்குனர் ரவி கிருஷ்ணா தாக்கர் பேசுகையில் "வராக் கடன் பிரச்சினையை தீர்க்கும் தீர்வு வங்கிகள் கையில் இல்லை. இது நாட்டின் பணம். பல்வேறு திட்டங்களில் அது சிக்கிக் கொண்டுள்ளது. அந்த திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
நமது சமூக-பொருளாதார நிலை மற்றும் சட்டம் என்பது மாறுபட்டது என்பதையும், கவனத்தில் எடுத்துக் கொள்ள தேவை உள்ளது" என்றார்.
மத்திய அரசின், முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் இலா பட்நாயக் பேசுகையில், "வங்கித் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் வெகு காலத்திற்கு முன்பே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. வராக் கடன் அளவு என்பது மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
IBC தற்போது தைரியமாகவும், உறுதியாகவும், நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் முன்பு எடுக்கப்பட்டது கிடையாது. தொடர்ந்து சிறப்பாக இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு துறையை நாம் தாராளமயமாக்கல் செய்துள்ளோம். ஆனால் வங்கித்துறை பல கட்டுப்பாடுகளின் கீழ் தான் இயங்கி வருகிறது.
நாம் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுகிறோம் ஆனால், பொருளாதாரத்தில் மூளையான, நிதித்துறை மட்டும் மூடி வைத்துள்ளோம். என்னைப் பொறுத்தளவில் பிரச்சினைகளுக்கு மூல காரணம் இதுதான்.
கடன் வழங்குவதில் அரசியல் தலையீடு, பணி நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றில் அரசியல் தலையீடு போன்றவை வேறு எந்த நாட்டிலும் இது போல நடைபெறாது. இதுபற்றியும், நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.