என்ன அதிபர் ஆட்சிக்கு முயற்சியா? ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து சீறிய கனிமொழி எம்பி!
டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் அதிபர் ஆட்சி முறைக்குதான் வழிவகுக்கும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எச்சரித்துள்ளார். மேலும் பெரும்பான்மை இல்லாத பாஜக கூட்டணி அரசால் இந்த மசோதாவை எப்படி நிறைவேற்ற முடியும்? என்றும் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி இன்று கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசுக்கு போதுமான பெரும்பான்மை கிடையாது. அப்படியான ஒரு நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது மத்திய பாஜக கூட்டணி அரசு. இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது இந்தியாவில் அதிபர் ஆட்சி முறைக்குதான் வழிவகுக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது நமது அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. மத்திஅ பாஜக ஆட்சியில் ஒரு மாநிலத்தின் சட்டசபை தேர்தலைக் கூட ஒரே நேரத்தில் நடத்த முடியவில்லை. மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டசபை தேர்தலை நடத்துகின்றனர். இதுதான் நிலைமை.. பின்னர் எப்படி நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகும்? இவ்வாறு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக லோக்சபாவில் திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில், மத்திய பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த ஒரே நாடு ஒரேந்தேர்தல் என்பது இந்தியாவின் அனைத்து வகையான அடிப்படைகளுக்கும் எதிரானது. இது ஒரு தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரான என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில்- 3ல் 2 பங்கு பெரும்பான்மை பெறாத சூழ்நிலையில் இத்தகைய ஒரு மசோதாவை எப்படி பாஜக அரசால் கொண்டு வர முடியும்? என்றார்.
இதனையடுத்து லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தார். பின்னர் முதல் முறையாக நடத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு மூலம் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications