ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக் கோள்.. போக்குவரத்து பயன்பாட்டுக்கு உதவிக் கரம் நீட்டும்
ஸ்ரீஹரிகோட்டா: தன்னிலையாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.
இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக IRNSS (Indian Regional Navigational Satellite System) என்ற திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ செயல்படுத்திவருகிறது.
7 செயற்கைக்கோள்கள் அடங்கிய இந்த திட்டத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி "IRNSS 1 A" என்ற செயற்கைக்கோளை இரவு நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நேவிகேஷன் தொழில்நுட்பம்:
தன் இரண்டாவது கட்டமாகத்தான் புதிய செயற்கைகோளான ஐஆர்என்எஸ்எஸ்-1 பி நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 24 ராக்கெட் இன்று மாலை ஏவப்பட்டுள்ளது.

300 கோடி மதிப்பு:
இந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.

4 நிலை ராக்கெட்:
மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 20 நிமிஷங்களில் செயற்கைக்கோளை தாற்காலிகமான பாதையில் நிலைநிறுத்தும். இந்த தாற்காலிகமான புவிச்சுற்றுவட்ட மாற்றுப்பாதை பூமியிலிருந்து அருகில் 284 கிலோமீட்டரும், தொலைவில் 20,652 கிலோமீட்டரும் கொண்டது.

தற்காலிகமான சுற்றுப்பாதை:
செயற்கைக்கோள் தாற்காலிகமான பாதையில் செலுத்தப்பட்டதும் பெங்களூருக்கு அருகில் உள்ள இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஹாசன் கட்டுப்பாட்டு மையம் செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்.

இன்று மாலை ஏவப்பட்டது:
இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ இரவில் ஏவப்பட்டது. இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோள் மாலை நேரத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

நிலைநிறுத்த திட்டம்:
பூமி சூரியனை எந்த இடத்தில் சுற்றிவருகிறது, இந்த செயற்கைக்கோளை எந்த இடத்தில் நிலைநிறுத்த வேண்டும் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயற்கைக்கோள் செலுத்தும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்:
போக்குவரத்துக்கு உதவவும், இருப்பிடத்தை அறியவும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் போன்று இந்தியாவுக்கென பிரத்யேகமாக நேவிகேஷன் திட்டத்துக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முயற்சி:
அதில், முதலாவதாக, ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தப்பட்டது. இரண்டாவதாக, ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோள் இப்போது செலுத்தப்படுகிறது. மீதமுள்ள 5 செயற்கைக்கோள்களும் அடுத்த ஆண்டுக்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துல்லியமான இருப்பிடம்:
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால் தரைவழி, வான்வழி, கடல் வழி போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலும், இந்தியாவின் எல்லையிலிருந்து 1,500 கிலோமீட்டர் வரையிலும் தங்களது இருப்பிடத்தைத் துல்லியமாக இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இரண்டு வகை போக்குவரத்து:
இந்த திட்டம் இரண்டு முறைகளில் நமது போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, நிலையான போக்குவரத்து வழித்தடத்திற்காகவும், மற்றொன்று இராணுவப் பயன்பாட்டிற்காகவும் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பயன்பாடுகள்:
1. இந்தியாவின் எல்லையில் இருந்து 1500 கி.மீ சுற்றளவில் இந்த திட்டம் பயன்பாட்டில் இருக்கும். இதன் மூலம் கப்பல்களின் பாதை மாறாமல் தடுக்க முடிவதோடு சரியான பாதையில் செல்வதற்கும் பயன்படும்.
2. புயல், கடும் மழை, சுனாமி உள்ளிட்ட மோசமான வானிலையிலும் கூட கப்பல்களை தொடர்புகொள்ளவும், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தவும் பயன்படும்.
3. தரை போக்குவரத்தைப் பொறுத்தளவில், GPS என்றழைக்கப்படும் வழித்தட சேவையை மேலும், மேம்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநருக்கு ஒலி மற்றும் ஒளி வடிவில் வழித்தட தகவல்கள் அளிக்க இந்த செயற்கைக் கோள்கள் பயன்படும்.
4. நாட்டின் இயற்கை மற்றும் அரசியல் வரைபடங்களை நவீன முறையில் தயாரிக்க பயன்படும்.

இராணுவப் பயன்பாடுகள்:
1. இந்திய எல்லைக்குள் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் கண்காணிக்கவும் பயன்படும்.
2. இந்திய நிலப் பகுதியின் எந்த மூலையில் பயணிக்கும் வாகனங்களையும் வெறும் 20 கி.மீ உயரத்தில் இருந்து கண்காணிக்க முடியும், இதன் மூலம் தீவிரவாதிகளின் போக்கை அறிந்து செயல்பட இராணுவத்திற்கு பயன்படும்.
3. முப்படைகளும் இந்த போக்குவரத்து வழித்தடங்களை கண்காணிப்பதால், நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட பயன்படுகிறது.












Click it and Unblock the Notifications