6 டன் எடை கொண்ட 36 செயற்கைகோள்கள்.. விண்ணில் சீறி பாய்ந்த எல்விஎம் 3 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படும் எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கைகோள்களுடன் எல்விஎம் 3- எம் 2 ராக்கெட் நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45ஆவது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
அதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இஸ்ரேவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திட, திரவ, கிரையோஜெனிக்
திட திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் முதல்முறையாக 6 டன் எடை கொண்ட 36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் மிகப் பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக கருதப்படுகிறது.

வணிக பயன்பாடு
அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது. இந்த ராக்கெட் 10 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டிருந்தாலும் 6 டன் எடை கொண்ட செயற்கைகோளுடன் 24 மணி நேர கவுன்ட்டவுனுடன் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்ரோ தலைவர்
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில் இந்த எல்விஎம்3 ராக்கெட்டை ஏவியது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த ராக்கெட் வணிக பயன்பாட்டுக்கு வரவேண்டும் என பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்ததால் இது சாத்தியப்பட்டது. ஜிஎஸ்எல்வி என்ற பெயரிலிருந்து எல்விஎம் என பெயர் மாற்றப்பட்டதற்கு காரணம், இந்த செயற்கைகோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படாது.

அடுத்த ஆண்டும்
ஒன் வெப் செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். ஒன் வெப் நிறுவனத்தின் மற்றொரு செயற்கைகோள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக ரூ 1000 கோடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications