பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கொட்டித் தீர்த்த கோடை மழை
பெங்களூர்: பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கோடை மழை பெய்து மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.
பெங்களூர் என்றால் குளு குளு என்று இருக்கும் என்ற காலம் வேகமாக மலையேறி வருகிறது. பிப்ரவரி மாதம் துவங்கியதில் இருந்தே பெங்களூரில் வெயில் மண்டையை பிளக்கிறது. மார்ச்சிலேயே கண்ணை கட்டுதே இன்னும் ஏப்ரல், மாதம் வேறு இருக்கிறதே பேசாமல் சென்னைக்கு சென்றுவிடலாமா என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு வெயில் சுள்ளென்று அடிக்கிறது.
இந்நிலையில் பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
புறநகர் பகுதிகளான ராமமூர்த்தி நகர், நெலமங்களா, கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, பானஸ்வாடி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் பெல்லந்தூர், ஜெயா நகர், பன்னர்கட்டா ரோடு, திலக் நகர், எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது. ஆனால் சில்லென்ற காற்று மட்டும் தொடர்ந்து வீசுகிறது.