பிரபல தெலுங்கு ஹீரோவுடன் சேர்த்து ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை பற்றி ஆபாச செய்தி: போலீசில் புகார்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் தன்னை இணைத்து இணையதளத்தில் ஆபாசமாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவரையும், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸையும் சேர்த்து இணையதளத்தில் ஆபாச செய்தி வெளிவந்துள்ளது.
இதையடுத்து ஷர்மிளா சார்பில் இது குறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
சோஷியல் நெட்வொர்க் உள்பட பல வெப்சைட்டில் ஷர்மிளாவை நடிகர் பிரபாசுடன் இணைத்து ஆபாசமாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்னை கேவலமாக விமர்சித்து இணையதளத்தில் செய்தி பரப்பப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள் இப்படி துஷ்பிரயோக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதை ஒரு இந்திய கலாச்சார பெண்ணுக்கு, ஒரு கணவரின் நல்ல மனைவிக்கு, ஒரு தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுகிறேன்.
இதனை உடனடியாக தடுக்காவிட்டால் இது வளர்ந்த கொண்டே போகும். நான் எனது அண்ணணுக்கு ஆதரவாக அரசியலுக்கு வந்தேன். எனது அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலர் என்னிடம் நேரடியாக மோதாமல் இப்படி குறுக்கு வழியில் என்னை களங்கப்படுத்த தரம் தாழ்ந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
நடிகர் பிரபாசை சந்தித்ததும் இல்லை, பேசியதும் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.