இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு
பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா முன்னிலையில் இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சிம்லா: இமாச்சலின் 13-வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று தனது அமைச்சரவையுடன் பதவியேற்றுக்கொண்டார். தாக்கூர் மற்றும் 10 மந்திரிகளுக்கு மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரின் பதவியேற்பு விழா இன்று சிம்லாவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.