மீண்டும் தடைபட்டுப் போன ஜல்லிக்கட்டு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா போன்ற சமூக ஆர்வலர் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. முன்னதாக இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரிக்க விலங்கு நல அமைப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்களை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனினும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை பானுமதி உள்ளிட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு பதிலாக, தீபக் மிஸ்ரா, ரமணா அமர்வுக்கு மாற்றப்பட்டது.
விளையாட்டிற்கு உட்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்களின் மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு மீண்டும் தற்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.