கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. ஒடிசாவில் பரபரப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசாவின் பலாசோரில் உள்ள சபிரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்ட நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமையான இன்று வந்து கொண்டிருந்தது.இந்த ரயில் சென்னை நோக்கி ஒடிசா மாநிலம் வழியாக சென்று கொண்டிருந்தது.. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சபிரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்தில் வந்த போது தண்டவாளத்தையொட்டி இருந்த மின்கம்பத்தில் ரயில் மோதியது.இதன் காரணமாக ரயில் தடம்புரண்டது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் பயணிகள்அதிர்ச்சி அடைந்தனர். எனினும் இந்த விபத்தில் பயணிகள் யாரும இறக்கவில்லை.. இந்த தகவலை தென்கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்தார். ரயில் விபத்து ஏற்பட்ட உடன் அங்கு மக்கள் கூட்டமாக குவிந்தனர். பலர் ரயில்களை விட்டு ஓடி வந்து என்ன நடந்தது என்று பார்க்க தொடங்கினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.உடனடியாக அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் இன்ஜின் பாதிக்கப்பட்ட நிலையில். மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 6.23 மணிக்கு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது.

இந்த விபத்து காரணமாக நான்கு ரயில்கள் ஆங்காங்கேநீண்ட நேரம் நிறுத்தப்பட்டன. ரயில் எண் 12245 ஹவுரா-SMVT பெங்களூர் எக்ஸ்பிரஸ் சோரோ-மார்கோனா இடையே நிறுத்தப்பட்டிருந்தது. இதேபோல் ரயில் எண் 68051 பாலேஷ்வர்-பத்ராக் லோக்கல் ரயில் சோரோ ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதேபோல் ரயில் எண் 18045 ஷாலிமார்-ஹைதராபாத் கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ் பலேஷ்வரில் நிறுத்தப்பட்டது. ரயில் எண் 20889 ஹவுரா-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரூப்சா என்ற ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் வழக்கம் போல் ரயில்கள் இயங்கின.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று இதே ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்தது. அங்கு ஜூன் 2, 2023 அன்று சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹானகா பஜார் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.அடுத்த சிறிது நேரத்திலேயே, தடம் புரண்ட அதன் சில பெட்டிகள் அருகிலுள்ள தண்டவாளங்களில் விழுந்தது. அப்போது வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதால் 296 பேர் உயிரிழந்தனர். 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications