ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல்: 8 தொகுதிகளில் போட்டியிடாத பாஜக! 279 பேர் வேட்பு மனுத் தாக்கல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தெற்கு காஷ்மீரின் 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 16 தொகுதிகளுக்கு 183 பேரும் ஜம்மு பிராந்தியத்தின் 8 தொகுதிகளுக்கு 96 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அனந்தநாக் மாவட்டத்தில் 72, புல்வாமா மாவட்டத்தில் 55, தோடா 41, கிஷ்வார் 32, ஷோபியான் 28, குல்காம் 28, ரம்பானில் 23 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 30. இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
தெற்கு காஷ்மீரில் மொத்தம் 16 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 16 தொகுதிகளில் போட்டியிட 183 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த 16 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மத்தியில் ஆளும் பாஜக போட்டியிடவில்லை.
தெற்கு காஷ்மீரில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் தலைவரான சிறையில் இருக்கும் சர்ஜான் பர்காதி உள்ளிட்ட 4 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். 2016 ஹிஸ்புல் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கு எதிரான வன்முறைகளால் அறியப்பட்டவர் பர்காதி. ஜைனபோரா ஷோபியான் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் பர்காதி. இத்தொகுதியில் பர்காதிக்காக அவரது மகள் நேரில் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
தெற்கு காஷ்மீரில் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களிலேயே பணக்கார வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் குலாம் அகமது மிர். தமக்கு ரூ16 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுத் தாக்கலில் தெரிவித்துள்ளார். புல்வாமா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த முன்னாள் தீவிரவாதி தலத் மஜித் தமக்கு ரூ20,000 ரொக்கம் மற்றும் ஒரு கார் என வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களிலேயே ஏழை.
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 8 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி 6, மக்கள் ஜனநாயகக் கட்சி 5, காங்கிரஸ் 5 தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த 8 தொகுதிகளுக்கு மொத்தம் 96 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோடாவில் மொத்தம் 6 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதில் பாஜக 4 இடங்களில் வென்றது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தற்போது 8 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த 8 தொகுதிகளிலுமே பாஜக போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications