களைகட்டும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்! மோடி, அமித்ஷா, ராகுல், பிரியங்கா காந்தி அடுத்தடுத்து பிரசாரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் வரும் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதேபோல பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய இருப்பதால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் களம் களைகட்டி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ முதல் கட்ட தேர்தலில் 2 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜம்முவில் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக பிரசாரம் செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலில் பின்னடவை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இதனால் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டனி அமைத்ததுடன் அதிகமான இடங்களை விட்டும் கொடுத்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸின் இந்த வியூகம் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகவும் மாறி இருக்கிறது.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய ஜம்மு காஷ்மீரில் குவிவதால் அங்கு தேர்தல் களை கட்ட தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications