ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே மத்திய அரசு கூட்ட கார்கே வலியுறுத்தல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 27 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவிகளான பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நம் அனைவரையும் மிகவும் காயப்படுத்தி, அதிர்ச்சியடையச் செய்ததோடு கவலையளிக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

2000 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான சிட்டிசிங்புரா படுகொலைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் மிகவும் வெட்கக்கேடான மற்றும் மூர்க்கத்தனமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நிராயுதபாணியான, அப்பாவி பொதுமக்களைக் கொல்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் எங்கள் கட்சியின் பிற மூத்த தலைவர்களுடன் பேசினேன். இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் (24 அக்பர் சாலை) உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூடும். அதனால்தான் நான் எனது நிகழ்ச்சியை ஒத்தி வைத்துவிட்டு, முன்கூட்டியே டெல்லிக்குச் செல்கிறேன்.
இது கட்சி அரசியலுக்கான நேரம் அல்ல. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம், உயிரிழந்தவர்களுக்கும், துக்கத்தில் இருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்கான கூட்டுத் தீர்மானத்திற்கான தருணம் இது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில், கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் பாரத் பூஷண் ஆகியோர் அடங்குவர். துக்கத்தில் இருக்கும் கொல்லப்பட்ட இருவரின் துணைவியரிடமும் நான் பேசி, அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தேன். கர்நாடக அமைச்சரவையில் நமது தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட் நியமிக்கப்பட்டு, அவர் ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுள்ளார். மேலும் அவர் கர்நாடகாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து வருகிறார்,
மேலும் அவர்களுக்காக விமானங்களையும் ஏற்பாடு செய்து வருகிறார். சொந் ஊர் திரும்ப விரும்பும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு முதல்வர் உமர் அப்துல்லாவையும் கேட்டுக் கொண்டேன். நமது உள்துறை அமைச்சரும் இதனைக் கவனிப்பதாக எனக்கு உறுதியளித்தார்.
இந்தத் துயர சம்பவத்தில் அவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடைக் காலம் இப்போதுதான் தொடங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லத் தொடங்கும் நேரம் இது. ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்திற்கும், அதன் மக்களுக்கும் சுற்றுலாதான் மிகப்பெரிய வருமான ஆதாரமாகும். காஷ்மீர் மக்கள் சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு அவர்களின் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு இப்போதே அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த நேரத்தில், நாம் அனைவரும் ஒருமுகமாக. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம்.
இது இந்திய அரசின் மீதான நேரடித் தாக்குதல். முழு தேசமும் அதிர்ச்சியில் உள்ளது. இதற்கு ஒரு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். செயல் ஏதும் செய்யாமல் குறை கூறுவது கூடாது.
பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். கிட்டத்தட்ட 22 மணி நேரம் ஆகிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைப் பராமரிக்க அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அமர்நாத் யாத்திரை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதில் பங்கேற்கின்றனர். முன்னதாக, யாத்திரையிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. எனவே யாத்ரிகர்கள் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழு தகவல்களும் பெறப்பட்டவுடன், பயங்கரவாதத்தின் சவாலை ஒருமித்த கருத்துடன் எதிர்கொள்ள அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை அழைத்து சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். இது அரசியல் அல்ல, இந்த சூழ்நிலையில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.
பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிக்க அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் நாங்கள் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளோம், மேலும் எங்கள் உயர்மட்டத் தலைவர்கள் இந்தப் போராட்டத்தில் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications