காஷ்மீர் தேர்தல்: பெண்களுக்கு பாஜக உரிமை தருகிற லட்சணம் இது? உக்கிரமாக போராட்டம் நடத்திய மகளிர் அணி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என கொந்தளித்த அக்கட்சியின் மகளிர் அணியினர் ஸ்ரீநகரில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெறும் வரையில் மொத்தம் 42 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒருவர்தான் பெண் என்பதால் மகளிர் அணி நிர்வாகிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை பாஜக அறிவித்தது முதலே ஏகப்பட்ட குழப்பம். முதல் கட்டமாக 42 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக. ஆனால் உடனேயே இந்த வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வாபஸ் பெற்றது.

இதனையடுத்து 15 வேட்பாளர்களுடன் முதல் கட்ட பட்டியல் மீண்டும் வெளியானது. 2-வது பட்டியலில் 1 வேட்பாளர் இடம் பெற்றிருந்தார். 3-வதாக நேற்று 26 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.
பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது; திடீரென பாஜகவில் இணைந்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனால் கொந்தளித்துப் போன பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறங்குவோம் அல்லது கட்சியைவிட்டே ஓடிப் போவோம் என எச்சரித்தனர்.
இந்த நிலையில் பாஜக அறிவித்த மொத்தம் 42 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண்ணுக்குதான் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளும் ஆவேசமடைந்தனர்.
இதனையடுத்து ஜம்முவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், பெண்களுக்கு சம உரிமை தருவதாக கட்சி சொல்கிறது. ஆனால் வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண்ணுக்குதான் வாய்ப்பு தந்துள்ளது கட்சி மேலிடம். அப்படியானால் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிற பெண்களுக்கு எப்போதுதான் வாய்ப்பு கிடைக்கும்? என்கிற குமுறலுடன் கட்சி மேலிடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் பாஜக அலுவலகம் முன்பாக பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications