காஷ்மீர்: "போய் மோடிகிட்ட சொல்".. கர்நாடகா சுற்றுலா பயணியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் கொக்கரிப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை ஈவு இரக்கமே இல்லாமல் படுகொலை செய்து வெறியாட்டம் போட்ட பயங்கரவாதிகளில் ஒருவன், "போய்.. மோடி கிட்ட இங்க நடந்ததை சொல்லு" என கணவரை பறிகொடுத்த கர்நாடகா பெண்மணியிடம் கொக்கரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை குறித்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த கோரத் தாக்குதலில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் தலைநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தில் கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தைப் பறிகொடுத்த கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்ற பெண் அளித்துள்ள பேட்டி, பயங்கரவாதிகளின் வக்கிர முகத்தை காட்டுவதாக வெளிப்பட்டிருக்கிறது.
பஹல்காமில் செய்தியாளர்களிடம் பல்லவி கூறுகையில், நான், என் கணவர் மஞ்சுநாத், மகன் மூவரும் சுற்றுலாவுக்கு பஹல்காம் சென்றோம். பிற்பக 1.30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். என் கணவர் மஞ்சுநாத், எங்கள் கண் முன்னாலேயே உயிரிழந்தார். அப்போது உள்ளூர் மக்கள் உடனடியாக உதவிக்கு வந்து எங்களது உயிர்களைப் பாதுகாத்தனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளில் இந்துக்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அப்போது, என் கணவரத்தான் சுட்டுக் கொன்றுவிட்டீர்களே.. என்னையும் கொன்றுவிடுங்கள் என பயங்கரவாதிகளிடம் கதறினேன். அதற்கு அந்த பயங்கரவாதிகளில் ஒருவன் சொன்னான், நான் உன்னை கொல்லமாட்டேன்.. இங்கே நடந்தை மோடியிடம் போய் சொல் (பிரதமர் நரேந்திர மோடி) என்றான்.
அத்துடன், என் கணவரின் உடலை எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ ஒப்படைத்துவிடுங்கள்.. நாங்கள் கர்நாட்காவின் சிவமோகாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். விமானம் மூலம்தான் கணவரின் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பல்லவி.
பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதலுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். டெல்லியில் உள்ள கர்நாடகா அதிகாரிகளுடனும் பேசினேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications