ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை: காஷ்மீர் தேர்தல் களத்தில் பதற்றம்- தலைவர்கள் பிரசாரம் ரத்து!
ஶ்ரீநகர்: லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொந்தளிப்புடன் கண்டனப் பேரணி நடத்தினர். ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் இந்த பேரணி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கும் வகையில் இஸ்ரேல் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் லெபனானில் ரத்த ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலக நாடுகளை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் மீதான தாக்குதல், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலைகளைக் கண்டித்து ஈரான், ஏமன் உள்ளிட்ட பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டனப் பேரணியை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் நஸ்ரல்லா படத்துடன் வீதிகளில் கண்டனக் குரல் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 1-ந் தேதி 3-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் பேரணி நடத்தினர். இதனால் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தனர். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications