பாஜகவிற்கு துணைமுதல்வர் பதவி இல்லை- மெஹபூபா முடிவால் காஷ்மீர் கூட்டணி அரசமைப்பில் சிக்கல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தான் முதல்வராக பதவி ஏற்றால் பாஜகவுக்கு துணை முதலமைச்சர் பதவி தர முடியாது என மெஹபூபா முஃப்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் காஷ்மீரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் முஃப்தி முகம்மது சயித்தின் மறைவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அரசியலில் ஒரு பிடிப்பற்ற தன்மை நிலவுகிறது. முஃப்தி முகம்மது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி பாஜக கூட்டணி அரசு அவரது மறைவை அடுத்து அதிகாரத்தை இழந்துவிட்டது.

கூட்டணியில் பெரிய கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.பியும், முஃப்தியின் மகளுமான மெஹபூபா புதிய முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துக்கம் அனுஷ்டித்து வரும் அவர் பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக முதலில் தகவல் வெளியானது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் நேற்று மெஹபூபாவை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்புகளின் போது ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய விவாதங்கள் நடந்ததாகவும் தெரிகிறது.
பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் கூட்டணி அரசு அமைப்பதில் பொதுவாக தயக்கம் காட்டி வரும் மெஹபூபா, நிதின் கட்கரியிடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிகிறது. பாஜகவின் முந்திய திட்டமான சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற உடன்பாட்டை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மெஹபூபா, தமது தந்தை அளித்தது போல பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியை அளிக்க தாம் தயாராக இல்லை என நிதின் கட்கரியிடம் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மெஹபூபா தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று அவரை சந்தித்த சோனியா காந்தி, புதிதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இதனால் ஜம்மு காஷ்மீரில் அடுத்து என்னமாதிரியான அரசு அமையும் என்று பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications