பானிபட் திரைப்படத்தால் பஞ்சாயத்து- ராஜஸ்தானில் ஜாட்கள் போராட்டம்
ஜெய்ப்பூர்: 3-வது பானிபட் போரை மையமாக வைத்து வெளியாகி உள்ள பானிபட் திரைப்படத்தில் பரத்பூர் மகாராஜா சூரஜ்மல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜஸ்தானில் ஜாட்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
18-ம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய யுத்தங்களில் (கி.பி.1761) 3-வது பானிபட் போரும் ஒன்று. மராத்தா அரசின் வட பிராந்திய படைகளுக்கும் ஆப்கான் அரசர் அகமது ஷா அப்தாலி படைகளுக்கும் இடையே இப்போர் நடைபெற்றது.

இதில் மரத்தா படைகள் தோல்வியைத் தழுவின. இப்போரில் சுமார் 40,000 மராத்தா வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பின்னர் 70,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வரலாற்றின் பக்கங்கள் பேசுகிறது.
இப்போரை மையமாக வைத்து பானிபட் திரைப்படத்தை அசுதோஷ் கோவாரிகார் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் கடந்த 6-ந் தேதி வெளியானது. இப்படத்தில் மராத்தா படைகளுக்கு பரத்பூர் மகாராஜா சூரஜ்மல் உதவவில்லை என சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு ராஜஸ்தானில் ஜாட்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் பானிபட் திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாஜ ஜாட்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சரும் மகாராஜா சூரஜ்மலின் 14-வது தலைமை முறை வாரிசான விஸ்வேந்திரா சிங் கூறியதாவது:
பானிபட் திரைப்படத்தில் மகாராஜா சூரஜ்மல் ஜாட் குறித்து தவறாக காட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட இந்தியாவில் ஜாட்கள் இத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பானிபட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இல்லை எனில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்படும்.
பானிபட் யுத்தத்துக்குப் பின்னர் போரில் படுகாயமடைந்த மராத்தா பெஷாவா (பிரதமர்) மற்றும் மராத்தா படைகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மகாராஜா சூரஜ்மல். சுமார் 6 மாதங்கள் மராத்தா ராணுவத்துக்கு அடைக்கலம் கொடுத்தவர் மகாராஜா சூரஜ்மல். ஆனால் பானிபட் திரைப்படத்தில் மகாராஜா சூரஜ்மல் குறித்து தவறாக காட்டியுள்ளனர். இவ்வாறு விஸ்வேந்திரா சிங் கூறினார்.
முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவும் பானிபட் திரைப்படத்தில் மகாராஜா சூரஜ்மல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், நான் இன்னமும் படத்தைப் பார்க்கவில்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications