ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: சுதாகரன் வக்கீலுக்கு குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி!
பெங்களூர்: பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் சுதாகரனின் வழக்கறிஞருக்கு நீதிபதி குமாரசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
பெங்களூரு நீதிமன்றத்தில் 29-வது நாளாக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுதாகரன், இளவரசி தரப்பில் 4வது நாளாக இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடும் சுதாகரனின் வழக்கறிஞர் சுந்தரத்துக்கு நீதிபதி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி முன் சுதாகரனின் 4 ஆண்டு சொத்துப் பட்டியலை அவரது வழக்கறிஞர் அளித்தார். சுதாகரன் வருமானம் ரூ. 2,12,47,978 செலவு ரூ. 1,84,73,019 பணம் வகையிருப்பு ரூ. 27,74,959 இருந்ததாகவும் எங்கள் மீது சொத்துக் குவிப்பு எந்த விதத்திலும் இல்லை. மேலும் தாங்கள் வருமானத்திற்கு நிகரான சொத்துக்களை சேர்த்து கையிருப்பு பணத்துடன் தான் இருந்தோம் எனவும் சுதாகரன் வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால் வருமான வரித்துறையிடம் அளித்த கணக்குக்கு மாறான தகவலை தருவது ஏன் என்று சுதாகரன் வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை தேவையின்றி வீணடிக்க வேண்டாம். நீதிமன்றத்துக்கு தவறாக தகவலைத் தர வேண்டாம் என்றும் நீதிபதி குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் வேறாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். சுதாகரன் வழக்கறிஞரை ஒரு மணி நேரம் கேள்விக்கணைகளால் நீதிபதி குமாரசாமி துளைத்தெடுத்தார்.
18 ஆண்டாகத் தாக்கல் செய்யாத புதிய சொத்துக்களைத் தருவது ஏன் என்றும் சரியான வாதங்களை மட்டுமே முன்வைக்குமாறு வழக்கறிஞர் சுந்தரத்துக்கு நீதிபதி குமாரசாமி அறிவுறுத்தினார். சரியாக வாதிடாவிடில் தாமே முடிவு செய்து தீர்ப்பு எழுத வேண்டியிருக்கும் என்றும் நீதிபதி குமாரசாமி எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications