நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு சரியானது அல்ல: சாடும் பி.வி. ஆச்சார்யா!!
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சொத்து மதிப்பீடு முறை சரியானது அல்ல என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞராக ஆஜராகிய பி.வி. ஆச்சார்யா கூறியதாவது:
நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கும் போது சொத்துகளை மதிப்பீடு செய்து கூறிய முறை சரியானது அல்ல. அவர் போட்டிருக்கும் கூட்டுத் தொகைகளில் பிழைகள் உள்ளன.
இது ஒன்றே மேல்முறையீட்டுக்கு செல்ல போதுமானதாகும். கட்டுமான செலவு, திருமண செலவு ஆகியவற்றை ரூ5 கோடி என மதிப்பீடு செய்திருக்கிறார் நீதிபதி குமாரசாமி. வங்கிக் கடன்கள் குறித்து நீதிபதி குமாரசாமி செய்திருக்கும் மதிப்பீடு தவறானதாக இருக்கிறது. இந்த அடிப்படையே மேல்முறையீடு செல்வதற்கு போதுமானதாக இருக்கும்.
இது தொடர்பாக கர்நாடகா அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.