ஜெ.வுக்கு தண்டனை உறுதியானால் சுப்ரீம்கோர்ட்டில் உடனே இடைக்கால ஜாமீன் கோர 'டீம்' ரெடி!
டெல்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதிசெய்யப்பட்டால் உடனே உச்சநீதிமன்றத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீன் கோர ஒரு குழு தயாராக இருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்னும் சில மணிநேரத்தில் தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

ஜெ. வக்கீல்கள் தீவிர ஆலோசனை
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி உறுதி செய்தால் எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து டெல்லியில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

உடனடியாக மனு செய்யப்படும்
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் உடனடியாக இடைக்கால ஜாமீன் கோரியும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சரணடைய விலக்கு அளிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்கும் அவரின் வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

விரிவான மனுக்கள் தயார்
மூத்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் படி தெளிவான விவரங்களுடன் இந்த மனுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி ஹெச்.எல்.தத்து முன் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கும்படி அவசர உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என வாதிட தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சல்மான் கான் வழக்கு பாணியில்
அண்மையில் கார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் சல்மான் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. தற்போது ஜெயலலிதா தரப்பு மனுத் தாக்கல் செய்யும்போது இதை சுட்டிக் காட்டவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications