வாஜ்பாயை கலங்கடித்த 14 மாதங்கள்.. மறக்க முடியாத ஜெயலலிதா.. பிளாஷ்பேக்!
டெல்லி: வாஜ்பாய் அரசை 1998ம் ஆண்டு ஜெயலலிதா கவிழ்த்தார். இந்திய அரசியலில் மறக்க முடியாத பெரும் சம்பவம் அது. ஆனால், இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை வாஜ்பாயே சென்னையில் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து வாஜ்பாயை பிரதமராக பதவியேற்க அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைத்தார்.
இதையடுத்து 10-ஆவது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால் வாஜ்பாயால் பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை திரட்ட முடியவில்லை. இதனால் 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.
படுதோல்வி
இதையடுத்து 1996 முதல் 1998ஆம் ஆண்டு இடையே இரு ஐக்கிய முன்னணி அரசுகள் அமைந்து அவையும் கவிழ்ந்தன. மக்களவைக்கு மீண்டும் தேர்தல் 1998-ஆம் ஆண்டு நடைபெற்றது. பாஜக மீண்டும் தனிப் பெரும் கட்சியாக வந்தது.
ஜெ. பாடாய்படுத்தினார்
தமிழகத்தில் 18 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரியது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் இழுத்தடித்த பின்னர்தான் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா. பாஜகவை நடுங்க வைத்தார் இந்த ஒரு வார காலமும். அத்தோடு முடியவில்லை துயரம். 14 மாதங்கள் நீடித்த பாஜக ஆட்சியில் அதிமுகவால் படாதபாடு பட்டார் வாஜ்பாய்.
மிரட்டல்கள்
தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்போதைய கருணாநிதி அரசை கலைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தொடர்ந்து நெருக்கி வந்ததாக கூறப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால் வாஜ்பாய் பணியவில்லை. இதையடுத்து ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் வாஜ்பாயின் 2வது ஆட்சி கவிழ்ந்தது.
மனம் திறந்த வாஜ்பாய்
ஜெயலலிதாவின் உருட்டல் மிரட்டல்களை 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தின்போது வாஜ்பாயே தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என மிரட்டியதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதுதான் பாஜகவையும், திமுகவையும் நெருங்கி வர வைத்தது. அடுத்த தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்து அமோக வெற்றி பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றது. இந்த ஆட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.