சிறையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டாரா ஜெ.?- தமிழ் ஒன் இந்தியாவுக்கு டி.ஐ.ஜி. சிறப்பு பேட்டி
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்கு உள்ளான ஜெயலலிதா, பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள, பெண்களுக்குரிய சிறைப் பகுதி அறை எண். 23ல் அடைக்கப்பட்டார். இது 12க்கு 18 அடி கொண்ட சிறிய அறையாகும். எனவே அந்த அறையில் இருப்பது ஜெயலலிதாவிற்கு அசவுகரியமாக இருந்துள்ளதால் அவர் பெண்கள் வளாகப் பகுதியில் முதல் மாடியில் ஒரு அறைக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த அறையில் ஜெயலலிதாவிற்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாகவும், ஜெயா டிவி, சன் டிவி, கேடிவி போன்ற தமிழ் சேனல்கள் பார்க்க வசதி கொண்ட செட்-ஆப் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து 'ஒன் இந்தியா தமிழ்' வெப்சைட்டிடம், சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயசிம்ஹா கூறியதாவது: குறிப்பிட்ட நாளிதழில் வந்துள்ள செய்தியில் உண்மையில்லை. கடந்த 27ம்தேதி 'மேடம்' எந்த செல்லில் அடைக்கப்பட்டாரோ அதே செல்லில்தான் தொடர்ந்து இருக்கிறார். சிறப்பு சலுகை அவர் கேட்கவுமில்லை, நாங்கள் கொடுக்கவுமில்லை.
இன்று காலை உணவாக இனிப்பு போடாத காபியும், டாக்டர் அறிவுரையின்படி ஒரே ஒரு இட்லியும் சாப்பிட்டார். மற்றபடி புரூட் சாலட் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார். ஜெயலலிதா ஆரோக்கியமாக உள்ளார். பார்க்க வந்து அனுமதி கேட்கும் யாரையும் இதுவரை 'மேடம்' சந்திக்கவில்லை. இவ்வாறு ஜெயசிம்ஹா தெரிவித்தார்.