ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை- தடை கோரிய மனு நிராகரிப்பு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து மெடோ ஆக்ரோபாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் உள்பட 10 நிறுவனங்களை விடுவிக்க கோரி அந்த நிறுவனங்கள் சார்பில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 2 மாதங்களுக்கு முன் தள்ளுபடி செய்தார் நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா.
மேலும் நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக 10 நிறுவனங்களுக்கும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நிறுவனங்களை நீக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை முடியும் வரை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் மூல வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி அரவிந்த குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்கப்படுவதாக அறிவித்தார். இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
மேலும், நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான மூல வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுவை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து உத்தரவிட்டார்.
அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications