"மிஷன் ஜார்கண்ட்" வேலையை ஆரம்பித்த பாஜக! வந்த மேஜர் அறிவிப்பு! திணறும் காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி?
ராஞ்சி: ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இப்போது களமிறங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையைச் சுமுகமாக நடத்தி முடித்துள்ளது. அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக இணை பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்தில் நடந்த 2 மாநில தேர்தலில் ஹரியானாவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றி கொடுத்த தெம்புடன் பாஜக அடுத்து நடக்கும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலைச் சந்திக்கிறது.

ஹரியானாவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. அங்குக் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாக நிலையில், பாஜக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தி முடித்துள்ளது.
ஓவர்: இது தொடர்பாக அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக இணை பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீட் பங்கீடு தொடர்பான விவாதங்கள் கிட்டதட்ட முடிந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஜேடியு 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) 1 தொகுதியிலும் போட்டியிடும். மற்ற தொகுதிகளில் பாஜக போட்டியிடும். தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்" என்றார்.
ஹரியானா ஸ்டைல்: ஹரியானா மாநிலத்திலும் இதேபோல தான் காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் திணறி வந்த போது, பாஜக சத்தமில்லாமல் கூட்டணியை இறுதி செய்து பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தது. இப்போது அதை ஸ்டைலை ஜார்கண்டிலும் பின்பற்றுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சீட்கள் உள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு பிஸ்வா சர்மா குறிப்பிட்டது போல சீட்களை ஒதுக்கிவிட்டால் மீதமுள்ள 68 சீட்களில் பாஜக போட்டியிடும்.
"இந்துக்கள் மக்கள் தொகை குறைகிறது.." நெருங்கும் தேர்தல்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு
முன்னதாக இன்று காலை தான் மத்திய அமைச்சரும், ஜார்க்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சவுகான், ஜார்கண்டில் பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஏஜேஎஸ்யு, ஜேடியு, எல்ஜேபி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும் என்பதை அறிவித்தார். அதைத் தொடர்ந்து இப்போது தொகுதி பங்கீடும் இறுதியாகியுள்ளது.மறுபுறம் அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் இழுபறியில் உள்ளது.
பாஜக நம்பிக்கை: ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆளும் தரப்பு மீது ஜார்கண்ட் மக்கள் அதிருப்தியில் உள்ளதால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக களமிறங்குகிறது. இதனால் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
எப்போது: முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 43 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் அக்டோபர் 25 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம். அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 38 தொகுதிகளுக்கு வரும் அக். 29 முதல் அக். 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரி அறைக்குள் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.5,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். மேலும், தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 11.84 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் ஆகும். மேலும், 1.13 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோர் ஆகும்.












Click it and Unblock the Notifications