கட்சி தாவிய பலர், லோக்சபா தேர்தலில் தோற்ற சிலர்.. ஜார்கண்ட் பாஜக வேட்பாளர் லிஸ்ட்! இதை நோட் பண்ணுங்க
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கட்சி மாறி வந்த, லோக்சபா தேர்தலில் தோற்ற பலருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், வரும் நவ. 13 மற்றும் நவ. 20 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே ஜார்கண்ட் தேர்தலுக்கு பாஜக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. முதற்கட்டமாக 66 பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதில் கட்சி தாவி பாஜகவில் இணைந்த 4 பேர் மற்றும் கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்கனவே பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 2 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
சாம்பாய் சோரன்: பாஜக வேட்பாளர் லிஸ்டில் உள்ள கட்சி தாவியவர்களில் முக்கியமானவர் சம்பாய் சோரன். ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது சுமார் 5 மாதங்கள் ஜார்கண்ட் முதல்வராக இருந்தவர் சம்பாய் சோரன். முதல்வராக இருந்த சமயத்தில் கூட கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி கடந்த ஆக. மாதம் அவர் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருந்தார். அவர் சரைகேலா தொகுதியிலும், அவரது மகன் பாபுலால் சோரன் காட்சிலா தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
அதேபோல சம்பாய் சோரனுடன் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான லோபின் ஹெம்ப்ரோம் (போரியோ) மற்றும் சரத் பவார் என்சிபி எம்எல்ஏ கமலேஷ் சிங் (ஹுசைனாபாத்) ஆகியோருக்கும் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
தேர்தலில் தோற்ற சிலர்: அடுத்து சீதா சோரன். இவர் ஹேமந்த் சோரனின் மூத்த சகோதரரான துர்கா சோரனின் மனைவி.. 3 முறை எம்எல்ஏவான சீதா சோரன், கடந்த மே மாதம் கட்சித் தலைமை மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது தனது கணவர் இறந்ததில் இருந்தே ஜேஎம்எம் தலைமை தன்னை புறக்கணிப்பதாகச் சாடினார். இதையடுத்து அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜேஎம்எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவில் ஐக்கியமானார்.
ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜக வேட்பாளர் லிஸ்ட் வெளியீடு.. ஹேமேந்த் சோரனுக்கு கொடுத்த "சர்ப்ரைஸ்"
கடந்த லோக்சபா தேர்தலில் தும்காவிலிருந்து பாஜக சார்பில் அவர் போட்டியிட்ட போதிலும், ஜேஎம்எம் வேட்பாளர் நளின் சோரனிடம் தோல்வியடைந்தார். சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. அவர் இந்த முறை, ஜம்தாராவில் போட்டியிடுகிறார்.
மீண்டும் வாய்ப்பு: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்பியாக இருந்த கீதா கோடா கடந்த பிப்ரவரியில் லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் ஐக்கியமானார். அவர் லோக்சபா தேர்தலில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சிங்பூமில் போட்டியிட்டார்.. இருப்பினும், அவர் ஜேஎம்எம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதற்கிடையே அவருக்கு மீண்டும் இப்போது ஜெகநாத்பூரில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் சுக்தியோ பகத்திடம் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சமீர் ஓரானுக்கு சட்டசபைத் தேர்தலிலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர் இந்த முறை பிஷுன்பூரில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications