ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடைகிறது! மாஜி முதல்வர் சாம்பாய் சோரன், எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டாகப் பிளவுபட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் பல முக்கிய தலைவர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய தினம் நமது நாட்டில் காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியானது. அதேபோல ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவுக்கும் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கு இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பாய் சோரன்: அங்குச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசில் அமைச்சராகப் பதவி இருக்கும் சம்பாய் சோரன், பாஜக தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முன்னாள் எம்எல்ஏ லோபின் ஹெம்ப்ரோமும் சம்பாய் சோரனுடன் இணைந்து பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் பாஜகவில் ஐக்கியமாகும் போது கூடவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பல எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த இரு தலைவர்களும் இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளனர். அதேநேரம் இதை இந்த தலைவர்கள் உறுதி செய்யவில்லை. பாஜகவும் இது குறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. அங்கு விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடைக்கால முதல்வர்: கடந்த பிப். மாதம் சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைதானார். அதற்கு முன்பு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். சுமார் ஐந்து மாதங்களுக்குச் சம்பாய் சோரன் தான் முதல்வர் பதவியில் இருந்தார்.
கடந்த ஜூன் 28ம் தேதி உயர்நீதிமன்றம் ஹேந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மூன்றாவது முறையாக ஹேமந்த் சோரனுக்கு முதல்வராகப் பதவியேற்றார்.
யார் இந்த சம்பாய் சோரன்: 67 வயதான பழங்குடியினத் தலைவர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் பீகார் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த போதே தனி மாநிலத்திற்காகக் குரல் கொடுத்துப் போராடியவர். இதன் காரணமாகவே அவரை ஜார்கண்ட் டைகர் என்று அழைத்தனர். அவர் 1991இல் ஒருங்கிணைந்த பீகாரில் உள்ள சாரிகேலா தொகுதியில் முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டார். சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர் தேர்தலில் வெல்லவும் செய்தார்.
1995இல் அவர் ஜேஎம்எம் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வென்றார். அதேநேரம் 2000ம் ஆண்டு ஜார்கண்ட் தனி மாநிலமான பிறகு அதே சாரிகேலா தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து 2005, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய 4 தேர்தல்களிலும் சம்பாய் சோரன் தொடர்ந்து வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications