ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம்.. மகள் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!
ஜார்கண்ட்டில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உயிரிழந்த மகள் உடலை தந்தை ஒருவர் பைக்கில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
கோண்டா : ஜார்கண்ட் மாநிலத்தில் இறந்துபோன மகளின் உடலுக்கு ஆம்புலன்ஸ் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், சடலத்தை அப்பெண்ணின் தந்தை பைக்கில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கோண்டா மாவட்டம் பெலாகரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவ் ஷா, இவரது 12 வயது மகள் லலிதா குமாரி, இவர் கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததால் ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் அன்றே, உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் லலிதா குமாரி பலியானார். இதனையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை.
இதனால், மகாதேவ் தனது மகள் உடலை பைக்கில் கட்டி தனது கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை இது சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Father carried daughter's body on a motorbike in the absence of ambulance, in Jharkhand's Godda on 6th December pic.twitter.com/o2bnoqdymq
— ANI (@ANI) December 8, 2017
இதுகுறித்து ராஞ்சி காவல் நிலையத்தில் மகாதேவ் ஷா புகார் அளித்து உள்ளார். அதில் முறையற்ற சிகிச்சை அளித்தது, உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்தது ஆகிய புகார்களில் மருத்துவர்கள் உட்பட 12 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.
மருத்துவ சுகாதாரத்தில் முன்னேறிவிட்டதாக அரசு புள்ளிவிபரங்கள் காட்டினாலும், வட மாநிலங்களில் இறந்துபோனவர்களின் உடலைக் கூட சரியான முறையில் எடுத்துச்செல்ல வசதி இல்லாமல் பலர் இதுபோன்று எடுத்துச்செல்வது வாடிக்கையாக நடக்கிறது. இதற்கு அரசு உடனடியாக தீர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications