81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து எரித்த 21 வயது பணியாள் கைது
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சமானது நிலவி வரும் நிலையில் அதனை அதிகப்படுத்தி உள்ளது 81 வயதான மூதாட்டி ஒருவர் மீதான பாலியல் வன்முறைச் சம்பவம்.
தெற்கு டெல்லியில் வசித்துவந்த 81 வயதான மூதாட்டி ஒருவர், தன்னுடைய வீட்டு வேலைக்காரராலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொலையாளியான வீட்டு பணியாளர் அம்மூதாட்டியின் சடலத்தை எரிக்கவும் செய்துள்ளார்.
பத்திரிக்கையாளர் மனைவி:
பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்மணியான ரேகா டுகல், மறைந்த யுஎன்ஐ முன்னாள் பத்திரிக்கையாளர் கே.கே.டுகலின் மனைவியாவார்.
மீட்கப்பட உடல்:
ரேகாவின் எரிக்கப்பட்ட உடலானது கடந்த திங்களன்று கைலாஷ் பகுதியில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.
கொலை செய்த பணியாளர்:
இவ்வழக்கில் போலீசார் ரேகாவின் வீட்டுப் பணியாளரான 21 வயது நீரஜ் சாகி என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் 10 மாதங்களுக்கு முன்பாகத்தான் ரேகாவின் வீட்டில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். பீகாரின் மதுபானி பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ்.
விபத்தாக நினைத்த போலீஸ்:
இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது, ரேகவின் மகள் வீட்டில் இல்லை. மேலும், முதலில் இது விபத்தால் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் நினைத்திருந்துள்ளனர். அதன்பின்புதான் நீரஜின் மீதான சந்தேகம் வலுப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.
ஒப்புக் கொண்ட குற்றவாளி:
மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளியான நீரஜ், அப்பெண்ணை பலாத்காரம் செய்தபின்பு, அதனை மறைப்பதற்காகவே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விலையுயர்ந்த பொருட்களையும் ரேகாவின் வீட்டில் இருந்து திருடிச் சென்றுள்ளார்.
போலீஸ் காவலில் விசாரணை:
நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது, போலீசார் நீரஜை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதனைத் தொடர்ந்து நீதிபதி அனு அகர்வால் நீரஜை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
கழுத்தை நெறித்துக் கொலை:
" ரேகாவின் உடற்கூறு ஆய்வின் முடிவுப்படி, பலாத்காரத்திற்குப் பின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளார் என்பதும், அதன்பின்னர் எரிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொலை நகரம் டெல்லி:
81 வயது பெண்மணி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியை கொலைகளின் நகராக உருமாற்றியுள்ளது.