சினம் கொண்ட சந்திரபாபு நாயுடு.. சிறையில் அக். 5 வரை அடைக்க உத்தரவு! மேலும் 11 நாள் நீதிமன்ற காவல்
அமராவதி: ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம்.
ஆந்திர பிரதேச முதலமைச்சராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சந்திரபாபு நாயுடு. இவரை கடந்த 9 ஆம் தேதி இரவு ஆந்திர மாநில போலீசார் ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்தனர். நந்தியாலா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். திறன் மேம்பாடு ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் பல மணி நேரம் விசாரணை செய்தனர். மறுநாள் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மாநில குற்றப் புலனாய்வுத் துறை அவரை எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது. அதை ஏற்று 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து ராஜமுந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சந்திரபாபு நாயுடு. மறுபக்கம் சந்திர பாபு நாயுடு தரப்பில் 2 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். மேலும் உடல் நிலை காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி கோரி மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. அதேபோல், சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவல் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் 22 ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து விஜயவாடா நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 2 நாட்கள் அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அந்த 2 நாட்கள் சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கால நீட்டிப்பும் இன்று நிறைவடையும் நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹிமா பிந்து முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை மேலும் 11 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications