தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சர்ச்சை நீதிபதி ஏ.கே.கங்குலி கடிதம்
டெல்லி: தம் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சர்ச்சைக்குரிய நீதிபதி ஏ.கே. கங்குலி விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சட்ட பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் நீதிபதி ஏ.கே. கங்குலி என்பது புகார். இது தொடர்பாக அம்மாணவி, உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவிடம் தாக்கல் செய்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணை தலைவர் பதவியில் இருந்து ஏ.கே. கங்குலி நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கங்குலி அசைந்து கொடுப்பதாக இல்லை.
இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கங்குலி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், என் தரப்பு நியாயத்தை எவருமே காது கொடுத்து கேட்கவில்லை என்று கூறியிருப்பதுடன் உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் முன் மாணவி அளித்த வாக்குமூலம் வெளியானதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்ற விசாரணைக் கமிஷன் முன் தாக்கல் செய்யப்பட்ட மாணவியன் வாக்குமூல நகலை தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு அதை அளிக்க மறுத்துவிட்டனர். இது சட்டப்படி எனக்கு மறுக்கப்பட்ட நீதியாகும் என்றும் கங்குலி குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications