மார்ச்.11-க்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி கர்ணனுக்கு அழைப்பு
டெல்லி: வருகிற மார்ச் 11 ஆம் தேதிக்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் பணியில் சேருமாறு அவருக்கு பணி ஆணை அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடிபடுபவர். நீதித்துறை பணியிடங்கள் விவகாரத்தில் இவர் பிறப்பித்த தடை உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் முறையிட்டார். இந்நிலையில் நீதிபதி கர்ணனனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் இடம் மாற்றம் செய்தார். இதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்க கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து நான் பிறப்பித்த உத்தரவு தவறானது தான். உடன் பணியாற்றிய நீதிபதிகள் சிலர் என்னை கேலி செய்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக, அப்படி ஓர் உத்தரவு பிறப்பித்து விட்டேன். இனி நீதித்துறையின் மாண்புக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வேன் என்று நீதிபதி கர்ணன் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கர்ணனின் இடம் மாற்றம் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அந்த தொலைநகல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று வந்துள்ளது. இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மார்ச்.11-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பணியில் வந்து சேருமாறு நீதிபதி கர்ணனுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications