தற்கொலை முயற்சிக்குத் தண்டனையா.... விதியை சட்ட புத்தகத்திலிருந்தே தூக்க வேண்டும் – டெல்லி நீதிபதி
டெல்லி: தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவருக்கான தண்டனையை சட்ட புத்தகத்தில் அனுமதிக்க கூடாது என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே அமித்குமார் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பினாயில் குடித்து மயங்கி கிடந்தார். ரோகினி பகுதியை சேர்ந்த அவர் சுல்தான்புரி போலீஸ் நிலைய அதிகாரி தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாகவும் அந்த பயத்தினால் தற்கொலை செய்வதாகவும் தனது கையில் எழுதியிருந்தார்.

அவரை போலீசார் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் உயிர்பிழைத்த அவர் மீது சுல்தான்புரி போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது கூறிய நீதிபதி மனிஷா குரானா கக்கார், "தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒருவரை தண்டிப்பதற்கான விதிகளை சட்டப்புத்தகத்தில் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த விதியை ரத்து செய்வதற்காக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தாலும் இந்த விதி காட்டுமிராண்டித்தனமானதும் மனித சமூகத்துக்கு எதிரானதும் ஆகும்" என்று தெரிவித்தார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதி மாறாக அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் இந்த வழக்கில் தற்போதைய விதிகளின்படி அமித்குமாரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். எனினும் அவருக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309 இன் படி தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications