கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கவில்லை...: இலங்கை அமைச்சரின் கருத்தால் புதிய சர்ச்சை
போபால்: கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்க வில்லை என இலங்கை அமைச்சர் சரத் அமுனுகாமா தெரிவித்துள்ளார்.
1974-ம் ஆண்டு, ஒரு உடன்படிக்கையின் மூலம் இலங்கை வசமான கச்சத்தீவை, அந்நாட்டிடமிருந்து திரும்பப் பெற பல்வேறு கட்சித் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். கடந்தாண்டு தமிழக சட்டசபையில் கூட இது குறித்தான தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை சர்வதேச நிதி ஒத்துழைப்பு அமைச்சர் சரத் அமுனுகாமா, ‘கச்சத்தீவை யாரும் தாரை வார்க்கவில்லை' எனச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அவரது பதில்களாவது :-
கச்சத்தீவு விவகாரம்...
கேள்வி:-1974-ம் ஆண்டு, ஒரு உடன்படிக்கையின் மூலம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே, இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்:- கச்சத்தீவினை இந்தியா ஒருபோதும் தாரை வார்க்கவில்லை. கச்சத்தீவு, இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்தியா அங்கீகரித்து இருக்கிறது. இதை இந்தியா ஆமோதித்து உள்ளது என்பதை சமீபத்தில் இந்த விவகாரத்தில் டெல்லியில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
மீனவர்கள் கைது பிரச்சினை...
கேள்வி:- இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனரே?
பதில்:- இலங்கை கடல் பகுதியில் மீன் அதிகமாக கிடைப்பதால், இங்கு மீன் பிடிப்பதை இந்திய மீனவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுமே இணக்கமான தீர்வு காண்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றன.
காமன்வெல்த் மாநாடு....
கேள்வி:- இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளாமல் போனது பற்றி?
பதில்:- இரு நாடுகளுக்கும் உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரு தரப்புக்கும் இடையேயான உறவுகள் பாதிக்கவில்லை.
போரில்லா பிரதேசம் படத்துக்குத் தடை...
கேள்வி:- ‘போர் இல்லா பிரதேசம்: இலங்கையின் கொலைக்களங்கள்' படத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதே, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- இந்த படத்துக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கை எதிர்ப்பு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இது இலங்கை மக்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதி ஆகும். அந்த வகையில், இந்த படத்துக்கு தடை விதித்து இந்தியா சரியான முடிவு எடுத்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம். இந்த படத்தின் மீதான தடை, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான வலுவான உறவுக்கு சான்று' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications