காவிரி பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும்: கமல்ஹாசன்
காவிரி குறித்து இன்று குமாரசாமியை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.
Recommended Video
பெங்களூரு: காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.
இதற்கான உறுப்பினர்களையும் தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் குமாரசாமியும் கமல்ஹாசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், காவிரி பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும். திரைப்பட விவகாரங்கள் குறித்து நான் குமாரசாமியுடன் பேசவில்லை. சினிமாவை விட காவிரிதான் முக்கியம். குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில் காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இருமாநிலங்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். கர்நாடக விவசாயிகளைப் போல தமிழக விவசாயிகளும் முக்கியமானவர்கள். தமிழக அரசு தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகாவும் தயார் என்றார்.