நடிகை + பாஜக எம்பி.. வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்தாமல் கங்கனா ரனாவத் டிமிக்கி.. பாக்கியை பாருங்க
சிம்லா: பிரபல நடிகையும், பாஜகவின் எம்பியுமான கங்கனா ரனாவத் தனது வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.90,384 யை பாக்கி வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கங்கனா ரனாவத் முதலில் மின்கட்டணத்தை செலுத்தி விட்டு காங்கிரஸை விமர்சிக்கட்டும் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சாடி வருகின்றனர்.
இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் சாகு உள்ளார். நடிகையும், பாஜகவின் எம்பியுமான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் தான். இவர் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் கங்கனா ரனாவத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது கங்கனா ரானாவத் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக இமாச்சல் பிரதேசம் என்பது சொந்த மாநிலம் என்பதால் அங்குள்ள காங்கிரஸ் அரசை அவர் சாடி வருகிறார். இந்நிலையில் தான் கங்கனா ரனாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்தாமல் ரூ.90,384 பாக்கி வைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கங்கனா ரனாவத் தான் எம்பியாக உள்ள மாண்டி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‛‛மணாலியில் உள்ள வீட்டில் நான் வசிக்கவேயில்லை. ஆனால் எனக்கு ரூ.1 லட்சத்துக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இது மாநிலத்தின் பரிதாபமான நிலையை காட்டுகிறது'' என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது.
இதையடுத்து இமாச்சல பிரதேச மாநில மின்வாரியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‛கங்கனா ரனாவத் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மின்கட்டணம் செலுத்தவில்லை. மேலும் அதற்கு முன்பாக ரூ.32,287 பாக்கி வைத்திருந்தார். இவை அனைத்தும் சேர்த்து கங்கனா ரனாவத் ரூ.90,384 பாக்கி உள்ளது'' என்று கூறியிருந்தது.
இதனை சுட்டிக்காட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், கங்கனா ரனாவத்தை விளாசி உள்ளார். இதுதொடர்பாக விக்ரமாதித்ய சிங் கூறுகையில், இமாச்சல பிரதேச மாநில மின்வாரியத்தின் தகவலின்படி கங்கனா ரனாவத் 2 மாத மின்கட்டண பாக்கியாக ரூ.90,384 வைத்துள்ளார். இந்த மின்கட்டணத்தை அவர் செலுத்திவிட்டு ஆளும் அரசை விமர்சனம் செய்யட்டும் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது கங்கனா ரனாவத் முதலில் பாக்கி வைத்துள்ள மின்கட்டணத்தை செலுத்திவிட்டு விமர்சனம் செய்யட்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
மேலும் தற்போது கங்கனா ரனாவத் மற்றும் காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ஆகியோர் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது. இவர்கள் 2 பேரும் இப்படி மோதிக்கொள்வது ஒன்றும் புதிது அல்ல. மாண்டி லோக்சபா தொகுதியில் கடந்த ஆண்டு இவர்கள் 2 பேர் தான் போட்டியிட்டனர். மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரானாவத் களமிறங்கினார். அவரை எதிர்த்து இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான விக்ரமாதித்ய சிங் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார். இவர் எம்எல்ஏவாக இருந்து கொண்டு எம்பி தேர்தலில் களமிறங்கினார்.
அந்த தேர்தலில் கங்கனா ரனாவத் மொத்தம் 5,37,022 ஓட்டுகள் பெற்றார். விக்ரமாதித்ய சிங் 4,62,267 ஓட்டுகள் பெற்றார். இதனால் கங்கனா ரனாவத் 74,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலை தொடர்ந்து அவர்கள் 2 பேர் இடையே கருத்து மோதல் என்பது தொடர்ந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications