கடைகளில் பெயர்கள் அழிப்பு, மெக்டொனால்ட்டுக்கு வார்னிங்.. பெங்களூரில் ஹிந்திக்கு எதிராக கொந்தளிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் அதிலும் குறிப்பாக பெங்களூரில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கன்னட அமைப்பினர் கடும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
பெங்களூரின் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் மொழிகளில் வார்த்தைகள் இருக்கும் நிலையில், அதில் ஹிந்தியை மட்டும் வண்ணம் பூசி அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர் கன்னட அமைப்பினர்.
ஹிந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் மொழி அவ்வளவுதானே தவிர, தேசிய மொழி என்றெல்லாம் இந்தியாவுக்கு எந்த ஒரு மொழியும் கிடையாது, என்ற உண்மையை கர்நாடகாவில் தற்போதுதான் அறிந்துள்ளனர்.

ரெஸ்டாரண்டுகள்
இந்த நிலையில், போராட்டம் இப்போது அடுத்தகட்டத்திற்கு போயுள்ளது. கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர், பெங்களூரின் சில உடற்பயிற்சி மையங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும் புகுந்து, ஹிந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டதை கண்டித்த வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

சிக்கிய மெக்டொனால்டு
சர்வதேச ரெஸ்டாரண்டான, மெக்டொனால்டு கிளையொன்றில் கன்னட அமைப்பினர் புகுந்து, ஏன் இங்கு கன்னடத்தில் பெயர் பலகை இல்லை, ஏன் கன்னடத்தை பயன்படுத்தவில்லை என்றெல்லாம் சரமாரியாக கேள்விகள் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது, ஆங்கில பயன்பாட்டையும் எதிர்க்கிறார்கள் கன்னட அமைப்பினர்.

கடை பெயர் பலகைகள்
சில பகுதிகளில் கடைகளின் பெயர் பலகைகளிலுள்ள ஹிந்தி பெயர்களை அழிக்கும் பணியில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதை போலீசார் தடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பே வெடித்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு புரட்சி இப்போது கர்நாடகாவிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

ஹிந்தி விரட்டியடிப்பு
பெங்களூரில் உள்ள எப்.எம் சேனல்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பாடலை ஒளிபரப்புவதோ, வசனங்கள் வருவதோ கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. எனவே எந்த எப்.எம் நிலையங்களும் பிற மொழிகளில் பாடல்களை ஒளிபரப்புவதில்லை. இதில் ஹிந்திக்கு மட்டுமே விதி விலக்கு. ஹிந்தி பாடல்களை சில எப்.எம்கள் ஒலிபரப்பி வருகின்றன. ஹிந்தியும் பிற மொழியை போன்றதுதான் என்ற எண்ணம் இப்போது கன்னடர்களுக்கு வந்துள்ளதால் இனி அதற்கும் ஆபத்து காத்துள்ளது.












Click it and Unblock the Notifications