மேகதாது விவகாரம்: கர்நாடக அனைத்துக் கட்சி குழு நாளை மறுநாள் பிரதமருடன் சந்திப்பு!
பெங்களூரு: காவிரியில் புதிய அணை கட்டுவது குறித்து வருகிற 30ம் தேதி கர்நாடக அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திக்கிறது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
மோடி நேரம் தரவில்லை
அதற்கு பதில் நடவடிக்கையாக கர்நாடக சட்டசபையில் பேசிய முதல்வர் சித்தராமையா கர்நாடகம் சார்பில் அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த 22ம் தேதி கர்நாடக அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திக்க இருந்தது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காததால் பிரதமரை சந்திப்பது தள்ளி வைக்கப்பட்டது.
30ம்தேதி சந்திப்பு
இந்நிலையில் கர்நாடக அனைத்துக்கட்சி குழு வருகிற 30ம் தேதி பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
அவிங்க சந்திச்சிட்டாங்க
"காவிரியில் அணை கட்டும் நமது முடிவுக்கு எதிராக பிரதமரிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து இருக்கிறார். பிரதமரை சந்திக்க நாங்கள் நேரம் ஒதுக்குமாறு கேட்டு இருந்தோம். வருகிற 30ம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அணை கட்ட கேட்போம்
அன்றைய தினம் கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை நாங்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்கிறோம். உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்லி, காவிரியில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.