கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதா? தேர்தல் ஆணையர் பதில்
Recommended Video
டெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பதில் அளித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இன்று காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, அடுத்த நொடியில் இருந்து, கர்நாடக அரசால் எந்த ஒரு நலத்திட்டங்களையும் அறிவிக்க முடியாது.
மக்கள் நல திட்டங்கள்
பேரிடர் மீட்பு போன்ற நடவடிக்கைகளை தவிர வேறு எந்த வகை நடவடிக்கைகள் மூலமும் மக்களை ஈர்க்க அரசுகள் முயற்சி செய்ய கூடாது. கர்நாடகாவில் மத்திய அரசும் எந்த நலப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எனவே நடத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
காவிரி மேலாண்மை வாரியம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் தேர்தல் அறிவிப்பை காரணமாக கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தவிர்த்துவிடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர்கள்
இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டபோது, வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள்தான் கூடாதே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடக மக்களிடையே எதிர்ப்பைதான் சம்பாதிக்குமே தவிர ஈர்ப்பை சம்பாதிக்காது என்பதால் இதற்கு நடத்தை விதிமுறை பொருந்தாதது, மேலும் இது உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் பிரச்சினை இல்லை என தெரிவித்தனர். இந்த தகவலை நாம் இன்று காலையிலேயே செய்தியாக வெளியிட்டோம். இப்போது நம்மிடம் பேசிய சட்ட வல்லுநர்கள் கருத்தையே, தலைமை தேர்தல் ஆணையரும் எதிரொலித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்குமா என்ற கேள்வியை நிருபர்கள், ஓம்பிரகாஷ் ராவத்திடம் எழுப்பினர். அதற்கு அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்காது என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். எனவே தேர்தலை வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மத்திய அரசால் முடியாது. வேறு காரணத்தை சொல்லி வேண்டுமானால் தள்ளிப்போட முயலலாம்.