சூடு பிடிக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம்.. எடியூரப்பாவும், யோகியும் செய்த பிரச்சார கூத்து
Recommended Video
ஹூப்ளி: கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பல வியூகங்களுடன் களமிறங்கியுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா பிரச்சார யாத்திரையை தொடங்கியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தில் இந்துத்துவா ஃப்ளேவரை சேர்த்து, காரசாரமாக்க, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவழைக்கப்பட்டுள்ளார்.
யோகியின் இந்துத்துவா
யோகி தனக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினார். கர்நாடகாவில் அவர் கையில் எடுத்த ஆயுதம், திப்பு ஜெயந்தி. திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அரசு விழாவாக கர்நாடக காங்கிரஸ் அரசு நடத்தி வருவதற்கு, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே ஹூப்ளியில் எடியூரப்பாவுடன் இணைந்து, யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தபோது, திப்பு ஜெயந்தி விவகாரத்தை கையில் எடுத்தார்.
ஹனுமார் வணக்கம்
பாஜக. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காங்கிரசுக்கு நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒருவேலை உள்ளது. இந்தியா ஹனுமாரை வணங்குமே தவிர திப்பு சுல்தானை கிடையாது என்பதை கர்நாடக மக்கள் எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார்.
எடியூரப்பாவின் ஆயுதம்
எடியூரப்பாவோ வட கர்நாடக மக்கள் குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்தார். கோடை காலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பிரசாரம் அப்போது பலனை ஈட்டும் என்பது பாஜக நம்பிக்கை. பெல்காம், ஹூப்ளி, கதக் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் கலசா-பண்டூரி திட்டத்திற்கு மாண்டோவி நதியில் இருந்து தண்ணீர் தேவை. இதை பங்கிடுவதில் கோவா-கர்நாடகா நடுவே தகராறு உள்ளது.
கடிதம் வாசித்தார்
இந்த நிலையில்தான், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சமீபத்தில் டெல்லியில் திடீரென சந்தித்து பேசினார் எடியூரப்பா. இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக எடியூரப்பா கூறியிருந்ததால் ஹூப்ளியில் வழக்கத்தைவிட எடியூரப்பா யாத்திரையில் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால் மனோகர் பாரிக்கர் தனக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை படித்து காட்டினார் எடியூரப்பா.
தேர்தல் நாடகம்?
மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் தேவைக்காக மட்டும் கோவா தண்ணீர் தர ரெடியாக உள்ளதாகவும், அதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மனோகர் பாரிக்கர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தான் வாசித்தார் எடியூரப்பா. இது தேர்தல் நாடகம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதாமல் பாஜக தலைவருக்கு கோவா முதல்வர் கடிதம் எழுதியுள்ளதில் இருந்தே இது தேர்தல் நாடகம் என்பது அம்பலமாகிறது என்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தண்ணீர் வருமா?
அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் அரசால் செய்ய முடியாத சாதனையை பாஜக தலைவர் என்ற வகையில் செய்து காட்டிவிட்டதாக எடியூரப்பா பிரசாரம் செய்து வருகிறார். இதன் மூலம், வட கர்நாடகாவில் கணிசமாக வாக்குகளை பெற முடியும் என அவர் நினைக்கிறார். ஆனால் தேர்தலுக்கு முன்பாக கோவா தனது வாக்குறுதியை செயலில் காட்டாவிட்டால் இது பாஜகவுக்கே எதிராக திரும்பும் யுக்தி என்பதையும் எடியூரப்பா அறிந்துள்ளார்.