அனல் பறந்த களம்.. தீவிரமான வார்த்தை போர்.. முடிவுக்கு வந்தது கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!
கர்நாடக தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜக தலைவர்கள் எல்லோரும் மொத்தமாக அந்த மாநிலத்தில் கூடி இருக்கிறார்கள்.
Recommended Video

பெங்களூர்: தீவிரமாக நடந்து வந்த கர்நாடக தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடைசி நாளில் பாஜக தலைவர்கள் எல்லோரும் மொத்தமாக அந்த மாநிலத்தில் கூடி பிரச்சாரம் செய்தார்கள். முதல்வர்கள், அமைச்சர்கள், பிரதமர் என பலரை அந்த கட்சி களத்தில் இறக்கியது. காங்கிரஸ் கட்சியும் கடைசி நேரத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்தது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது. இன்று தான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள்.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வந்தனர். முக்கியமான தலைவர்கள் எல்லோரும் இன்று அந்த மாநிலத்தில்தான் இருந்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே பிரதமர் மோடி கர்நாடகாவில் மொத்த 18 இடங்களில் மேடை அமைத்து பேசிவிட்டார். முதலில் 5 இடங்கள் திட்டமிடப்பட்டு, பின் 12 இடங்களாக மாற்றப்பட்டு, கடைசியில் 18 இடங்களில் பேசினார். இரண்டு முறை மட்டுமே அவர் டெல்லி சென்றுவிட்டு திரும்பினார். அந்த அளவிற்கு கர்நாடக தேர்தலில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.
இன்று பிரச்சாரம் செய்ய கடைசி நாள். தற்போது பிரச்சாரம் முடிவிற்கு வந்துள்ளது. இதன் காரணமாக காலையிலேயே மொத்தமாக எல்லா தலைவர்களையும் பாஜக களத்தில் இறக்கியது. மொத்தமாக 55 பெரிய தலைவர்கள் பாஜக சார்பாக இன்று மட்டும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தனர். முக்கால்வாசி அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதற்காக தற்போது கர்நாடகா வந்தனர்.
மொத்தமாக 22 மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். பாஜகவில் பிரச்சாரம் செய்த முக்கியமானவர்கள் யார் என்று பார்த்தால், ஆனந்த் குமார், ராமன் சிங், சிவராஜ் சிங் சவுகான், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்குர், கிருஷ்ணபால் குஜ்ஜார், சந்தோஷ் கங்வார், மீனாக்ஷி லக்கி, ஜெ பி நட்டா, முரளிதர ராவ், பியூஸ் கோயல், தர்மேந்திரா பிரதான், சுரேஷ் பிரபு, ஜிதேந்திர சிங், பி பி சவுத்திரி, ஆர்கே சிங், சம்பித் பத்ரா, சிவா பிரதாப் சுக்லா, ஹர்ஷ்வர்தன், தவர்சந்த் கோஹ்லட், மனோஜ் திவாரி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
அதேபோல் முக்கியமாக யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் ஆகிய இரண்டு மாநில முதல்வர்களும் பிரச்சாரத்தில் களமிறங்கி இருந்தனர். உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயலில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது கூட யோகி இங்கு பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் சூடு பிடித்தது. முக்கியமாக சித்தராமையா பாஜகவிற்கு எதிராக டிவிட்டரில் போடும் போஸ்டுகளால் டிவிட்டர் வைரலாகி இருந்தது. மாறாக பாஜக கர்நாடகாவில் யூ டியூப் பார்க்கும் எல்லோரும் அவர்களின் விளம்பரத்தை கடந்துதான் வீடியோ பார்க்க முடியும் என்ற நிலைமையை உருவாக்கும் அளவிற்கு அவ்வளவு விளம்பரங்கள் செய்தது. காங்கிரஸ் மாறாக சோனியா உள்ளிட்ட முக்கியமான மூத்த தலைவர்கள் எல்லோரையும் களமிறக்கியது.
பிரகாஷ்ராஜ், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட காங்கிரஸ் சேராத பிரபலங்கள் கூட பாஜக கட்சிக்கு எதிரான பிரச்சாரம் செய்தனர், அதேபோல் திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட காங்கிரஸ் சமூக வலைதள பிரபலங்கள் காங்கிரஸுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். பல கலகலப்பு, களேபரங்களுடன் பல நாள் பிரச்சாரம் ஓய்விற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications