காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்: சித்தராமையா
காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்த்து கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்யும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு அறிவித்தது. அதன்படி, தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் குறைத்து அறிவித்தது.
இதன் பிறகு இந்த வழக்கில் 15 ஆண்டுகளுக்கு எந்த வித மேல்முறையீடும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகத்திற்கு 14 டிஎம்சி கூடுதலாக வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் தீர்ப்பில் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.