தமிழகத்துக்கு டிசம்பரில் காவிரி நீரை சேர்த்து தருகிறோம்... சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா 'இழுத்தடிப்பு
டெல்லி: தமிழகத்துக்கான காவிரி நீரை டிசம்பரில் சேர்த்து தருவதாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ந் தேதி முதல் 6,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு. இந்த உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகா அரசு சிறப்பு சட்டசபையை கூட்டி, காவிரி நீர் குடிநீருக்குத்தான் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்றத்தில் நாளை காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரியில் 6,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்துக்கு தற்போது திறந்துவிடப்பட வேண்டிய நீரை டிசம்பர் மாதத்தில் சேர்த்து தருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கமாட்டோம் என கூறினால் நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதால் அதில் இருந்து தப்பிக்க 'டிசம்பரில் நீரை தருகிறோம்' என இழுத்தடிப்புக்காக இந்த மனுவை கர்நாடகா தாக்கல் செய்துள்ளது.
மனுவுக்கு தமிழகம் எதிர்ப்பு
இதனிடையே கர்நாடகாவின் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே காவிரி நீர் பற்றி உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில் இந்த புதிய மனு மீது விசாரணை தேவையில்லாதது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications